நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

புதன், 31 அக்டோபர், 2012




உன் வியர்வை வாசனை..
நீ சுவாசித்த 
காற்றின் மிச்சம்..
உன் உதட்டில் 
ஒட்டி இருக்கும் ஒற்றை சோறு..
ஓய்வெடுக்க உன் மடி.. 
போதும்.. 
என் ஜென்மம் 
சாபல்யமடையும்...!!!

செவ்வாய், 30 அக்டோபர், 2012






அருவிச்சாரலில் 
சிலிர்க்க வைப்பதும்.. 
அமில மழையில் 
குளிக்க வைப்பதும் 
உன் வார்த்தைகளுக்கு மட்டுமே 
சாத்தியம்..!!!
திருவிழா முடிந்த கோயில்...
கல்யாணம் முடிந்த மண்டபம்..
புயலுக்கு பின்னான வாழை தோட்டம்.. 
இந்த வரிசையில் இப்போது நானும்... 
ஆம்.. 
நீ வந்து சென்ற பின் 
நானும் இப்படித்தான் கிடக்கிறேன்.. 
வெறுமையாய்.. 
நிலைகுலைந்து..!!!
தன்னைத்தானே சுற்றும் பூமி 
சூரியனிடமிருந்து நம்மை 
மறைத்துவிடுவது போலத்தான் 
என் காதலும் 
மறைந்து இருந்தது.. 
நீ புரிந்துகொள்ளாமல் 
விலகி இருந்த நேரங்களில்...!!!
ஆனால்.. சூரியன் 
என்றுமே மறைவது இல்லை... 
என் காதலும்...!!!
காற்றும் உன்னை 
கனமாய் தீண்டாமல் 
இமையால் காத்திருப்பேன்... 
வெப்பம் உன்னை அண்டவிடாமல் 
ஈரமாய் நனைத்துவைப்பேன்.. 
கண்ணீரில் நீ மூழ்கிவிடாமல் 
அழுகையை அடக்கி வைப்பேன்..
காதல் கவசமிட்டு
காலமெல்லாம் உடனிருப்பேன்..!!!

திங்கள், 29 அக்டோபர், 2012

ஒரு தேவதையென நினைக்கும் 
அடுத்த சில நிமிடங்களில் 
ராட்சஷி அவதாரமெடுத்து 
அன்பில் என்னை 
கொல்கிறாய்... 
தேவதையோ- 
ராட்சஷியோ.. 
எந்த அவதாரத்திலும் 
உன்னுள் உறைந்திருப்பது 
என் வரம்..!!!

ஞாயிறு, 28 அக்டோபர், 2012

கல்லுக்குள்  ஒளிந்திருந்த 
சிற்பம் மாதிரியான 
மனசுக்குள் நீ 
மறைத்து வைத்திருந்த 
காதலை கண்டுபிடித்து .. 
வெட்கம், பயம், 
கோபம், திமிர் ,ஆணவம்.. 
எல்லா வேண்டாத  சில்லுகளையும் 
செதுக்கி  எறிகிறேன் ...
ஒரு சிற்பி அவதாரமெடுத்து.. 
காதல் சிற்பம்  கையில் தவழ்கிறது...!!!
 
பெருங்கடலாய் 
சலனமற்றிருக்கிறது 
உன் அன்பு... 
உறிஞ்சிக்குடித்துவிடும் 
சிற்றெறும்பாய் நான்.. 
உனக்குள் நான்.. எனக்குள் நீ..!!
ராமனின் பாதம்பட்டு 
கல் அகலிகையானது 
ராமகாதை... 
உன் இதழ்கள் பட்டு 
நான் தேவனானது 
காதல் கீதை..!!!

சனி, 27 அக்டோபர், 2012


ஈரமில்லாத இடத்தில் 
விதைகள் முளைப்பதில்லை.. 
உன் நாக்கால் 
உதட்டை ஈரமாக்கிக்கொள்.. 
கொஞ்சம் முத்தங்களை 
விதைக்க போகிறேன்..
விளைந்த பின் 
அறுவடை செய்துகொள்கிறேன்..!!!
எனக்கும் சேர்த்து சாப்பிட்டாயா 
என்ற கேள்விக்கு 
உனக்காக மட்டும்தான் 
சாப்பிட்டேன் என்றாள்.. 
நான் அவளுக்காக சாப்பிட்டேன்.. 
சந்திக்கும் போது 
அவளுக்காக சாப்பிட்டதை கொடுத்துவிட்டு 
எனக்கானதை வசூல் செய்ய வேண்டும்..

ஒரு
கடைக்கண் பார்வை வீசுகிறாய்..
முக்கோண பெட்டகத்தில்
ஊடுருவும்
ஒளிக்கற்றையாய்
காதல்,
ஆசை,
காமம்,
பாசம் என
வண்ணங்களால்
நிரம்பி வழிகிறது
வாழ்க்கை..!!!
உன் மடியில்சாய்வதற்காக 
மயக்கமானதாய் நடிக்கிறேன்..
மார்பில் சாய்த்து 
உச்சந்தலையில் இதழ் பதிக்கிறாய்..
நிஜமாகவே மரித்து 
சொர்க்கத்தில் உயிர்த்தெழுகிறேன்...!!!
உன் இதழ் உறிஞ்சி 
குறும்பு செய்யும் பொழுதில் 
கொன்னுடுவேன் என்கிறாய்... 
அமிர்தம் குடித்த அடுத்த நொடியே 
எப்படியடி கொல்வாய் என்னை??
உன் 
முந்தானை வாசனைக்காகவே 
நான் குளித்து முடித்து 
துவட்டி வருகையில் 
காதுகளை ஈரமாய் வைத்து வருவதும்.. 
நீ கட்டிலில் கிடக்கும் துண்டின் மேல் 
தலையணையை நகர்த்தி 
மறைப்பதும் 
நம் தெரிந்ததாய் காட்டிக்கொள்ளாத 
காதல் ரகசியங்கள்.. !!!
நீ குடிவந்த நாள் முதல் 
இதயத்திற்கு 
இரத்தம் கொண்டுவரும் 
நாளங்கள் எல்லாம் கூடுதல் சுமையாய்.. 
இரத்தம் எடுத்துச்செல்லும் 
நாளமெல்லாம் வறண்டுபோய்... 
ஆம்... உன்னைப்பார்க்க ஓடிவரும் 
சிவப்பு வெள்ளை அணுக்கள் எல்லாம் 
திரும்பி செல்ல மறுப்பதால்தான் 
இந்த விபரீதம்..!!!

புதன், 24 அக்டோபர், 2012


ஒரு 
கடைக்கண் பார்வை வீசுகிறாய்.. 
முக்கோண பெட்டகத்தில் 
ஊடுருவும் 
ஒளிக்கற்றையாய் 
காதல், 
ஆசை, 
காமம்,
பாசம் என 
வண்ணங்களால் 
நிரம்பி வழிகிறது 
வாழ்க்கை..!!!

திங்கள், 22 அக்டோபர், 2012

நீ தலைகுளித்து 
முடி உலர்த்தி நிற்கிறாய்..... 
இன்று மழை வருமென 
நினைத்தேன்... 
மழை வரும்போதுதானே 
மயில் தோகை விரிக்கும்..??

மலர்ந்த ரோஜா
மொட்டாகும்
அதிசயம் நிகழ்கிறது...
ஒவ்வொரு முறை நான்
உன்னை முத்தமிட குனியும் போதும்
மூடிக்கொள்ளும் உன் இதழ்கள்...!!!

காவிரியில் 
தண்ணீர் கேட்டு போராடும் 
தமிழகத்தையும் மிஞ்சி விட்டது.. 
என் காதல் போராட்டம்.. 
நீ மறைத்து வைத்திருக்கும் 
எனக்கான காதலை மீட்டெடுக்க...!!!
அரக்கன் என்று அறியப்பட்டாலும் 
அடுத்த ஜென்மத்தில் 
ராவண அவதாரம் தான் 
வேண்டுமெனக்கு..... 
அப்போதுதான் 
உன் அழகை அள்ளி பருக 
எனக்கு இன்னொரு ஜென்மமும் 
இருபது கண்களும் கிடைக்கும்..!!!

மழை பெய்த இரவின் விடியலில்
கண்ணில் படும் இளம்தளிராய்
குளித்துவிட்டு வந்து நிற்கிறாய்..
உன் கூந்தல் மழையில்
நனைய தொடங்குகிறேன்..!!!
பெண்கள் தொட்டாசிணுங்கியா 
என்பதெல்லாம் 
எனக்கு  தெரியாது... 
ஆனால் உன் கண் இமைகள் 
தொட்டாசிணுங்கி என்பதை 
தெரிந்துகொண்டேன்.... 
உன்னை தொடுகையில் 
அவைதான் உடனடியாய் மூடிக்கொள்கின்றன...!!!

சனி, 20 அக்டோபர், 2012

கிரகங்கள் எல்லாம் இடம் மாற 
மாதம்- வருடமெல்லாம் ஆகுமாம்.. 
அதை வைத்துத்தான் 
சந்தோஷங்களும் 
கஷ்டங்களும் வருமாம்.. 
எனக்கு மட்டும் இது 
நிமிடங்களில் நடக்கிறது..,,
நீ உடனிருந்தால் 
சனி பெயர்ந்து நகர்கிறது.... 
நீ விலகினால் 
குருவும் சுக்கிரனும் 
கூட்டாய் வெளியேறுகிறார்கள்..!!!
தெரிந்தவர்களின் 
திருமண ஆல்பம் 
பார்க்க நேரும்போதெல்லாம் 
கற்பனை செய்ய 
முயன்றிருக்கிறேன்.. 
எனக்கான ஆல்பத்தில் 
எனக்கு 
பக்கத்தில் இருப்பவளின் முகத்தை.. 
தினசரி தெருவில் சந்திக்கும் 
அத்தை பெண் மாதிரி...
எனக்கு இரண்டாம் வகுப்பில்
பாடம் சொல்லித்தந்த டீச்சர் மாதிரி...
டி வி சீரியலில்
பாந்தமாய் நடிக்கும் நடிகை மாதிரி..
வெள்ளித்திரையில் கண் சிமிட்டும்
நான் ரசிக்கும் கதாநாயகிகள் மாதிரி..
திருமண ஆல்பம்
கையில் கிடைத்தபின் முடிவு செய்தேன்..
தேவதையை
கற்பனை செய்ய முடியாதென்பதை..!!!

வியாழன், 18 அக்டோபர், 2012

இரவு ஒன்பது மணிக்கு 
மருதாணி இட்டுக்கொள்ளும்போதே 
தெரிந்து விடுகிறது.. 
உனக்கு என் கையால் 
சாப்பாடு ஊட்டிக்கொள்ள 
ஆசை என்று..!!!

புதன், 17 அக்டோபர், 2012

மௌன யுத்தத்தில் 
என்ன செய்வதன்று தெரியாமல் 
தொண்டைக்குழியில் 
தயங்கி நிற்கிறது 
உனக்கான வார்த்தைகள்.. 
உன் கோபம் 
அந்த வார்த்தைகளுக்கு 
முலாம் பூசி மறைத்துவிட்டால் 
காதல் 
கண்ணுக்கு தெரியாமல் போய்விடுமே...!!!
பூமியை விட்டு 
விலகிப்போக போக 
வானவில் வட்டமாய் தெரியுமாம்.. 
நீ விலக விலகத்தான் 
உன்மீதான அன்பின் 
முழு பரிமாணம் தெரிகிறது...
நீயில்லாத நேரங்களில் 
சுதந்திரம் வேண்டுகிறது 
என் உயிர் பறவை...
அப்போதெல்லாம் 
உன் குறுஞ்செய்தி வந்து 
கூட்டை இறுக்கமாய் பூட்டுகிறது..!!!
எஸ்கிமோக்களின் தேசத்தில் 
வெயிலடிக்கும்.. 
அரேபிய மண்ணில் 
மழை பொழியும்.. 
உன் நினைவுகளோடு பயணித்தால்..!!!
உன் சந்தோஷத்தில் 
பவுர்ணமியாயிருக்கும் 
என் இரவுகள்... 
உன் கோபத்தில் 
அடுத்த வினாடியே 
அமாவாசையாகிவிடுகிறது.. 
ஆனால் 
மீண்டும் ஒரு பவுர்ணமி 
கொஞ்சம் கொஞ்சமாய் 
வளர்பிறைக்கு பிறகே வருகிறது...!!!
நண்பர்கள்.. 
சக ஊழியர்கள்.. 
வழியில் சந்திப்பவர்கள்.. 
பல சரக்கு கடைக்காரர்கள்.. 
எல்லோருக்காகவும் 
புன்னகைகளை உதிர்கிறேன்.. 
சில அடி மனதிலிருந்து.. 
சில மேலுதட்டிலிருந்து.. 
சில காரியத்தோடு.. 
சில வெட்டியாய்... 
ஆனால்.. உனக்கான புன்னகை மட்டும்
உண்டியலில் சேகரிக்கும்
சில்லரைக்காசாய் சேர்க்கப்படுகிறது..
காத்திருக்கிறேன்..
அந்த புனித யாத்திரைக்கு..
நேர்த்திக்கடனை விரைவில் முடிக்க..!!!
காதல் மேகங்கள் திரண்டு 
உன் இதழ்வழி பெய்யும் 
முத்தமழை காணாமல் 
வறண்டு கிடக்கிறது என் உதடுகள்.. 
வறட்சி நிவாரணமாய் 
கொஞ்சம் முத்தங்களை 
அலைபேசிவழி அனுப்ப கூடாதா..??


குழந்தைக்கு கொடுக்கவேண்டிய 
என் முத்தங்கள் 
மிக சூடாயிருக்கிறது.. 
உன் இதழ்களில் 
இறக்கி வைக்கிறேன்.. 
குழந்தைக்கு நீ கொடுத்து விடுகிறாயா..??

சனி, 13 அக்டோபர், 2012


பல காதல் கல்வெட்டுக்கள்
கரிக்கோடுகளால்
கோயில் சுவர்களில்
எழுதி வைக்கப்படுகின்றன..

செந்தில் கே. நடேசன்@பரண்
 — with Senthil K Nadesan.
நேற்றிரவு 
என் அறையில் 
காற்றுப்பதனக்கருவி 
பழுதடைந்திருந்தது.. 
மின்விசிறிக்காற்றில் 
உடம்பு வலிக்கும் என்பதால் 
நான் கனவுகாணாமல் 
தூங்கினேன்.. 
என் கனவில் கூட நீ 
கஷ்டப்படக்கூடாது..!!!
ஒரு சிறிய 
உதட்டு சுழிப்பு.. 
ஒரு செல்ல கோபம்.. 
ஒரு லேசான கடைக்கண் பார்வை.. 
எனக்கு கவிதை கிடைக்க 
ஓராயிரம் உள்ளதடி 
உன்னிடம்.. 
நீ மட்டும் உடனிரு.. 
நான் தேடி எடுத்துக்கொள்கிறேன்..!!!
கவிதையால் என்னை 
கட்டிப்போட்டு விட்டாய் என்று 
புகார் செய்கிறாள்... 
கட்டவிழ்த்து வெகு நாட்களாயிற்று.. 
காதல்தான் 
ஒட்டிவைத்திருக்கிறது என்பதை 
எப்படி சொல்ல..??

வியாழன், 11 அக்டோபர், 2012

உணவு- 
டீ காஃபி - 
வேலை- 
நண்பர்கள்- 
எல்லாவற்றுடனும் 
ஒரு நிமிடம் கூட குறையாமல் 
இருபத்து நான்கு மணி நேரமும் இருக்கிறது... 
ஆனாலும் 
என் நாட்கள் 
நிறைவடைவதில்லை.. 
உன்னுடன் பேசாத பொழுதுகளில்..!!!

ஞாயிறு, 7 அக்டோபர், 2012

அழுகை வருகையில் 
உன் மார்பில் 
நான் சாய வேண்டும்.. 
சந்தோசம் வருகையில் 
உன் மடியில் 
நான் சாய வேண்டும்.. 
காதல் வருகையில் 
உன் மீது நான் சாய வேண்டும்.. 
காமம் வருகையில் 
உன் மேலே நான் சாய வேண்டும்... 
சாயும் இடங்கள் மாறலாம்..
மாறாதிருப்பது நீ மட்டும்..!!!
விரகத்தீயில் 
வெந்து கொண்டிருக்கிறது 
என் இளமை... 
வெற்றுக்காற்றில் 
பற்றி எரிகிறது என் காதல்.. 
நெருப்பை நெருப்பால் 
அணைத்துக்கொண்டிருக்கிறேன் ..!!!
நீரின்றி அமையுமோ 
அமையாதோ... 
ஆனால் நீயின்றி அமையாது 
என் உலகு..!!!

தேவதையின்
வருகைக்காய் காத்திருக்கிறேன்..
கிறுக்கன்  மாதிரி..!!!