நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

புதன், 29 பிப்ரவரி, 2012

தாவரங்கள் 
தமக்குத்தாமே 
நடத்திக்கொள்ளும் 
பூப்புனித நீராட்டு விழா 
அழைப்பிதழ் தான் 
வாசனையும் 
வண்ணங்களும்...!!!

செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

பல யுகங்கள் கடந்த 
நெடிய தவத்தின் 
வெம்மை தாங்காமல் 
கடவுள் என் முன் 
பிரசன்னமானார்... 
என்ன வேண்டும்.. 
சீக்கிரம் கேள்..
எனக்கு 
நிறைய வேலை இருக்கிறது..!! 
ஒ கடவுளே.... 
பெரிதாய் ஒன்றுமில்லை.. 
என் மரணம் 
எனக்கு வலிக்க கூடாது... 
எல்லோருக்கும் 
வலிக்க வேண்டும்.. ... 
இதற்கு ஏன் 
என்னை அழைத்தாய்... ?? 
காதலி.. 
காதலித்துக்கொண்டே இரு.. 
என் எல்லா படைப்புகளையும் 
எதிர்பார்ப்பில்லாமல் காதலி.. 
உன் மரணம் 
நிச்சயமாய் 
எனக்கும் கூட வலிக்கும்..!!!
இறகுகள் 
உதிர்ந்தபின்னும் 
மிச்சமிருக்கும் நிமிஷங்களை 
ஓடியாவது 
வாழ்ந்துவிட 
துடிக்கிறது..
ஈசல் பூச்சி..
ஒரு நாள்தான்
ஆயுளென்று தெரியாமலேயே.....!!

வெள்ளை 
கொடிகளுக்கோ, 
சமாதான 
உடன்படிக்கைகளுக்கோ 
அவசியமற்று 
போய் விடுகிறது..
நமக்கும்
வாழ்க்கைக்குமான
கொடூர யுத்தத்தில்......

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

சில 
நன்றிகளுக்காக 
காத்திருந்த 
வேளைகளில் 
ரொம்ப தூரம் 
போயிருக்கலாம்....!!

எதிர்வரும் 
தருணங்கள் 
எனக்கெப்போதும் 
ஒரு சவாலாகவே இருக்குமென 
உள்ளூர் ஜோசியன் 
சொன்னது சரிதான்...
ஆம்.. 
நீ எதிர்வரும் தருணங்கள்...!!
கடந்து போகும் 
பெண்களை 
திரும்பி பார்க்கக்கூடாதென 
கண்களுக்கும் 
கழுத்துக்கும் 
கட்டளையிட்ட மனசு..
யாருமறியாமல்
கொஞ்ச தூரம்
பின்னால் சென்றுதான்
திரும்புகிறது...!!
முன்போல் நீ 
கதவு மறைவில் 
காத்திருப்பதில்லை... 


சமையலறையில் 
பூனைமாதிரி 
பின்னாலிருந்து
அணைக்கும் இதமில்லை..
பெற்றோருக்கும்
பிள்ளைகளுக்கும்
தெரியாமல் 
சத்தமில்லாமல்  கொடுக்கும்
ஈரம் நிறைந்த
ரகசிய  முத்தங்களில்லை...
என் பற்களால் 
உன் கன்னங்களில்  வரிகள் பதித்த
கன்னக்கதுப்புக்களில்
முதுமை
வரைந்திருக்கிறது வரிகளை...
ஆனாலும்
பத்தாயக்கொட்டகையின்
கயிற்றுக்கட்டிலில்
இருமலினூடே
" கிழவன் சாப்பிட்டாரா" என
மருமகளிடம் வினவும்
உன் குரல்
காதுகளில் ஊடுருவும்
வேளைகளில் 
கிளர்த்தேல்ழும் காதலினூடே 
தோன்றுகிறது ....
உன்னோடு வாழ
இன்னொரு ஜென்மம்
கண்டிப்பாய் வேண்டும்...!!!

வியாழன், 23 பிப்ரவரி, 2012


நான்
முயற்சிப்பேன் என 
அவளும் 

அவள் 
ஏதாவது சைகை 
செய்யமாட்டாளா என்று 
நானும் 
காத்திருந்து 
காத்திருந்து  
விடைபெறுகிறோம்... 
தனிமையும் 
முத்தமும் 
ஏமார்ந்துபோகின்றன...   

புதன், 22 பிப்ரவரி, 2012

சூரியனின் மீதான 
அதீத எதிர்பார்ப்புகள்  
நிலாவையும் 
நட்சத்திரங்களையும் 
தொலைக்க 
காரணமாயிருக்கிறது... 
அவைகள் 
எத்தனை 
அழகாயிருந்தபோதும்...
சிலசமயம் 
சூரியனை 
பார்க்கவே முடிவதில்லை...!!
வல்லூறுகளாயிருந்தாலும் 
அதன் இறக்கைகளுக்கு கீழேயும் 
கொஞ்சம் நிழல் இருக்கிறது.. 
குறைந்தபட்சம் 
அதன் குஞ்சுகள் 
இளைப்பாறவாவது...!!
முரண்பாடுகள்...

மிருகவதைக்காய் 
ஜல்லிக்கட்டு நடத்த 
தடைகோரியவருக்கு 
கசாப்பு கடை
ராவுத்தர் பாய்
நெஞ்செலும்பு
தனியாய் எடுத்து
வைத்திருக்கிறார்..
அவர் விரும்பி சாப்பிடும்
வாடிக்கையாளராம்...!!
******************
பன்னிரெண்டு மணி நேரம்
கடந்தும்
பெரிய நடிகரின் கால்சீட்
காலாவதியாகி விடக் கூடாதென்று
ஏழு வயது சிறுவன்
தொடர்ந்து
நடித்துக்கொண்டிருக்கிறான்...
குழந்தை தொழிலாளி பற்றிய படம்...!!

உயிர்த்தெழுந்த
பெண்மை
உறங்கிக்கிடந்த
ஆண்மையை
தின்றுவிட்டதால்
'வாய்' மையும்
'கண்' மையும்
எங்கள் வசமானது..
கூந்தலோடு சேர்த்து
கொங்கையும் வளர்த்தோம்..
ஆனாலும்
திரு நங்கைகளாய்த்தான்
ஆகமுடிந்தது..
ஏனோ தெரியவில்லை..
எங்களால்
திருமதி நங்கைகளாய்
ஆக முடியவே இல்லை...!!!
விலை மகளான விளைமகள்...

ஆசைப்பட்டதென்னவோ 
இரவா வாழ்க்கை 
கிடைத்ததென்னவோ... 
இரவு வாழ்க்கை...

தூக்கம் மறுக்கப்பட்டதால்
கல்யாணம் பற்றிய
கனவுகள் கூட வருவதில்லை...
ஆனாலும்
எல்லா இரவும் முதலிரவுதான்

கடவுள் கூட
எங்களை
கண்டுகொள்வதில்லை...
அப்படித்தான் நினைக்கிறேன்..
ஒருவேளை அவரும்கூட
மாறுவேடத்தில்
வந்திருக்க கூடும்..!!
உலகின் 
தலை சிறந்த 
கவிஞர்களுக்கான 
பட்டியலில் 
உனது பெற்றோர்களின் 
பெயர்களைத்தான்
முதலில் பதிந்து
வைத்திருக்கிறேன்...
உன்னை விட
சிறந்த கவிதையை
வேறொருவர்
எழுதி இருக்க
முடியுமா என்ன?

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

திரிகளை 
எரித்துதான் 
தீபங்கள் 
ஒளிர்கின்றன... 
ஆனாலும் 
திரிகள்
வெளிநடப்பு
செய்வதில்லை...!!!


நீ திரியாயிருக்கும் 
நேரத்தில் நான் 
தீபமாயிருக்கிறேன்... 
நீ தீபமாக விரும்பினால் 
நான் திரியாயிருக்க 
சம்மதிக்கிறேன்...!!
தான் 
கட்டிய வீட்டை 
இடித்துத்தள்ளியவனை 
கொண்டாடுகின்றனர்... 
கடற்கரையில் குழந்தைகள்..!!!


உன் காது 
மடலருகிலிருந்து 
ஆக்ரோஷ வேகத்தில் 
உருண்டு வரும் 
வியர்வைத்துளியும் 
கழுத்து 
கடந்த உடனே 
சாந்தமடைகிறது...
நிர்வாணம் 
எதற்கும் 
கவலைப்படுவதில்லை... 
ஆடைகள்தான் 
அதிகம் 
அலட்டிக்கொள்கின்றன...
சில நேரங்களில்
தாம் தான் பாதுகாப்பதாய்...
சில நேரங்களில்
தன்னுடைய அடிமையென...
சில நேரங்களில்
தன்னை விட
அதிக அக்கறைகொள்வோர்
யாருமில்லை என..
இன்னும் எப்படியெல்லாமோ...
ஆனால்..
நிர்வாணம்
கடைசிவரை
நிர்வாணமாகவே இருக்கிறது...!!!
ஒரு அடி முட்டாள்தனமோ... 
அதீத புத்திசாலித்தனமோ... 
ஒரு சுய பச்சாதாபமோ.. 
இயலாமையோ.... 
இன்னும் 
எத்தனை பெற்றோர்களை
பெற்றிருந்த போதும்
கோபம் பிரசவிக்கும்
ஒரே குழந்தை
இழப்பாகத்தானிருக்கிறது...

சனி, 18 பிப்ரவரி, 2012

மூக்கு உடைந்தும் 
ஒற்றை கை இழந்தும் 
மூளியாகி கிடக்கிறது  
பழைய சைக்கிளில் 
மிஞ்சிய மணியுடன் சேர்ந்து 
ஒரு வெள்ளை சாக்கில்... 
என்னால் 
தினசரி 
குளிப்பாட்டப்பட்டும் 
அலங்கரிக்கப்பட்டும் 
துணையாயிருந்த 
மரப்பாச்சி பொம்மை... 

என் குழந்தை டெடி பேருடன் 
பேசிக்கொண்டிருக்கிறாள்... 
என்னை சுமக்க தயாராய் நிற்கிறது 
நூற்று இருபத்தைந்து சி சி.. 

அவைகளிரண்டும் 
எங்களைப்பற்றி 
பேசிக்கொண்டிருக்கின்றன..
சத்தமிலாமல்..!!!

வியாழன், 16 பிப்ரவரி, 2012

இரவுக்கு 
தெரியாமல் நிலாவும்... 
பகலுக்கு 
தெரியக்கூடாதென 
சூரியனும் 
ஒளிந்துகொள்ள 
நினைக்கும் 
முட்டாள்தனமாக 
போய் விடுகிறது.. 
உன்மீது நான் 
கோபப்படும் 
நேரங்களில் என் காதல்...!!

தொடக்கமெது... 
முடிவெது.. 
எனத்தெரியாத 
வட்டமாயிருக்கிறது 
நம் காதல்... 
தொடக்கம் தேடியும்
கிடைக்கவில்லை...
முடிவெது என தேட
பிடிக்கவில்லை...!!!

புதன், 15 பிப்ரவரி, 2012

நீ 
வெற்றி பெறுவதற்காய் 
நானும்.. 
நான் 
வெற்றி பெறுவதற்காய் 
நீயும்
யுத்தம் செய்கிறோம்...
கடைசியில்
காதல் வென்றுவிடுகிறது..!!!
உன் பார்வை படும் 
இடங்களாய் பார்த்து 
என் இதயத்தை 
தொலைத்து 
வைக்கிறேன்... 
நீ கண்டெடுத்து..
"இது உன்னுடையதா"
எனும் பொழுதில்
அவசரமாய் மறுக்கிறேன்...
அது உனக்கானது..
நான் தொலைத்திருந்தாலும்..
சிலகாலம்
என்னுடனிருந்த
உனக்கானது..
எப்படி சொல்ல
என்னுடையதென..???
சில மெழுகுவர்த்திகளோடு 
நான் காத்திருக்கிறேன்... 
சூரியன்,,, 
வெண்ணிலா... 
சில மின் விளக்குகள்... 
எல்லாம் தொலைந்த
ஏதாவதொரு இரவில்..
நீ தேடும் வெளிச்சத்திற்காக..!!!

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

நீ 
போனபின்பு கூட 
நீ கடந்து சென்ற 
பாதைகளில் 
தேடிக்கொண்டிருக்கிறேன்.. 
நீ விட்டுச்சென்ற 
கவிதைகளை..!!!

சனி, 11 பிப்ரவரி, 2012

உன்னைப்பற்றிய 
கவிதைகளுக்கு 
இனி நான் ஆச்சர்ய குறிகளை 
தவிர்த்துவிட 
போகிறேன்... 
அந்த கவிதைகளே
உனக்கான
ஆச்சர்ய குறிகள் தானே..!!
நான் 
சில கவிதைகளுக்காக
காத்திருக்கிறேன்..
அந்த கவிதைகளோ..
உனக்காக 
காத்திருக்கின்றன..!!!
-    +   X      =






என்னிடமிருக்கும் 
மைனஸ்களை 
இரட்டைபடையில் 
தேடித்தேடி 
கண்டு பிடிக்கிறாய்... 
அதை கூட்டலாகவோ(+)
பெருக்கலாகவோ... (x)
குறைந்த பட்சம்
சமமாகவோ(=) மாற்றி விட...

காதலர் தினம் கொண்டாடும் அனைவருக்கும்.........
தினம் காதலர்களாய் இருக்கும் எங்களின் வாழ்த்துக்கள்...

நட்புடன்.. செந்தில் கே நடேசன்.. மற்றும் அம்மு...
உன் கைகளை 
நான் சிவனாய் 
உணர்கிறேன்..... 
உன் விரல்கள் 
விசைப்பலகையில் 
(key board )
ருத்ர தாண்டவம்
ஆடும் பொழுதுகளிலெல்லாம்...!!!

நீயே இட்டுக்கொண்ட
மெஹந்தி டிசைனில் தான்
புரிந்ததெனக்கு....
அன்றொரு நாள்
நானிட்ட பொழுது
"அற்புதம்" என்று
நீ சொன்னதில் இருந்தது
உண்மையில்லை..
காதலென்று..!!!
காதல் என்பது..
************
* சமாதானத்திற்கான யுத்தம்...
யுத்தத்திற்கான சமாதானம்.

* வெயிலில் குளிர்..
குளிரில் வெயில்..


* பகலில் இரவு..
நள்ளிரவில் ஒரு சூரிய உதயம்..


*மோட்டுவளையில் 70mm படம் ஓட வைப்பது..

*கூட இருந்த மணித்துளிகளை மீண்டும் மீண்டும் மீட்டெடுத்து அனுபவிப்பது...

* கனவுகளின் கர்ப்பம்..
கவிதைகளின் பிரசவம்..


*விலக விலக நெருங்குவது..
நெருங்கி வந்தால் உருகுவது..


* எப்படியும் முழுதாய் சொல்லவிட
ஏதாவது மொழியில் ஒற்றை வார்த்தைக்கு தவிப்பது..


*நிரப்ப முடியாமல் முயன்று கொண்டிருக்கும் வெற்றிடம்..

*பிரபஞ்சத்தை இடம் மாற்றி வைப்பது..

* சொர்க்கத்திற்குள் நரகம்..
நரகத்தின் உள்ளேயே சொர்க்கம்..



*கற்றுக்கொண்டதைஎல்லாம் மறக்கச்செய்வது..
தெரியாததையும் கற்றுக்கொடுப்பது..


* மரணம் வெல்லும் எளிய வழி...

*உடைந்த கண்ணாடி வளையல்களை பொக்கிஷமாக்கி.. பூர்வீக சொத்துக்களையும்துச்சமாக்குவது..

* கனவில் ஒரு வாழ்க்கை..
வாழ்க்கையில் ஒரு கனவு..



* சுகத்தில் ஒரு வலி..வலியில் ஒரு சுகம்...

*பக்கத்து வீட்டை வேறு கிரகத்திற்கு கடத்தி விட்டு
பிரபஞ்சத்தை சுருக்குவது..

வியாழன், 9 பிப்ரவரி, 2012







என் செல்ல புருஷா... 
மதிய சாப்பாடு ரெடி 
பண்ணிட்டேன்.. 
ப்ரிஜ்ல மாவு இருக்கு 
நைட்டுக்கு தோசை சுட்டுக்கோ.. 
இதான் சாக்குன்னு வெளிய சுத்தாம..
நேரத்துக்கு தூங்கு..
ம்ம்.. தலையனைல
கொஞ்சம் முத்தம் வச்சிருக்கேன்..
அம்மா வீட்டுக்கு
போயிருக்கும் அவளின் தகவல்..

அவிழ்த்துபோட்ட
புடைவையை போர்த்திக்கொண்டு
முத்தங்களை
தேடிக்கொண்டிருக்கிறேன்..
சூடு ஆறிவிடக்கூடாதென்று.....
நான் 
அணைத்துக்கொண்டு 
படுத்திருக்கும்  
நம் நீல இரவுகளின் 
நினைவுகளை தின்று விட 
நீண்டிருக்கிறது 
இந்த கோர இரவு... 
அலாரம் 
அடித்து அடித்து ஓய்கிறது... 
புல்லினங்கள் 
கூவி இரைதேடி 
கூட்டிலடைகின்றன.. 
சூரியனும் 
சோம்பல் முறித்து 
எழுந்து எழுந்து 
உறங்கச்செல்கிறது.....  
வாரம் மாதமாகி.. 
பின் வருடமாகிறது.. 
நீயின்றி என் பகல்கள் கூட 
வெள்ளை இரவாகவே தொடர்கிறது.. 
நான் உன் மடி சேரும் நிமிடத்தில் 
அந்த நினைவுகளை 
தின்ன இயலாத இரவு 
விடியலை நோக்கி மெல்ல நகர்கிறது...