உனக்கு கொடுக்க
எதுவுமே இல்லையடி என்னிடம்...
என்கிறேன் நான்!!
உன்னை தவிர
வேறு எதுவும் இல்லை
உன்னிடம் கேட்க..
என்கிறாய் நீ..!!
கைகொட்டி சிரிக்கிறது காதல்..!!!
கொழுந்து விட்டு எரியும்
தீபாராதனை தட்டை சுழற்றி
மணியடிக்கும்
குருக்களின் இடைவெளியில்
இறைவனை தரிசிக்க
முன்னோக்கி குனிந்து
கைகூப்பி நிற்கிறது
கூட்டம்...
எதிர்வரிசையில் நிற்கும்
உன்னோக்கி குனிந்து நிற்கிறேன்
நான்..
கைகொட்டி சிரிக்கிறது காதல்..!!!
எங்க போய் தொலைஞ்சான்..
கோபம் வருகிறது உனக்கு...
இப்போதானடி பேசிட்டு வந்தேன்....
என் கூடவே இருக்க நினைக்கும்
உன் காதலை நினைத்து
கர்வ சலிப்பு எனக்கு ..
திரையில் மின்னுகிறது
நான் தவறவிட்ட உன் அழைப்பு..
கைகொட்டி சிரிக்கிறது காதல்..!!!
ஜன்னலோர இருக்கை கேட்டு
தோழியுடன் சண்டை பிடித்து
இயற்கையை ரசித்தவள்
நான் ஏறியபின்
உட்புறம் திரும்பி
உதடுகளால் தோழியிடமும்
கண்களால் என்னிடமும்
உரையாடலை தொடங்குகிறாய்...
கை கொட்டி சிரிக்கிறது காதல்..!!
"எக்கேடோ கெட்டு ஒழி.."
புகை சகிக்காமல்
மணல் உதறி விலகி நடக்கிறாய்...
"என்ன ஆச்சு...என்ன ஆச்சு.."
தொடர்ந்து கேட்கிறது அலைகள்..
மௌனித்திருக்கிறேன் நான்...
அரைமணி கடக்கவில்லை..
" எங்கடா இருக்க...." அலை பேசி கேள்வி...
கை கொட்டி சிரிக்கிறது காதல்...!!
கோயில் சுவற்றில்
வெடிப்பில் விழுந்த விதையாய்
காத்திருக்கிறேன் நான்..
உன் பார்வை ஈரம்
பட்ட வினாடியில்
முளைக்கத்தொடங்கி..
நீ மறுக்க மறுக்க
உன்னுள் விஸ்வரூபமெடுக்கிறேன் நான்..
கையறு நிலையில் உடைகிறது
என்னை விலக்கிவிட துடித்த உன் திமிர்..
கை கொட்டி சிரிக்கிறது காதல்..!!!
சொல்லிவிட்டு
அன்றே மறந்துவிட்டேன் அதை..
"இவன் சொல்லி
நான் என்ன செய்வது.."
ஒவ்வொரு நாளும்
உன் கர்வம் கேட்ட இந்த கேள்விதான்
என்னை உன்னுள்
ஆழமாய் பதியனிட்டது.
நீ மறுக்க மறுக்க
உன்னுள் முளைத்து
வேர்விடுகிறேன் நான்..
இறுதியில்
எனக்காக செய்ததை மறைத்து
இயல்பாய் செய்ததாய்
உனக்கு நீயே சொல்லிக்கொள்கிறாய்..
கை கொட்டி சிரிக்கிறது காதல்..!!!