நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

புதன், 21 நவம்பர், 2012

நான் அமைதியாயிருக்கும் 
நேரங்களில் 
நீ பாத்திரங்களை உருட்டுவது 
நீ கொண்டு வரும் 
கவன ஈர்ப்பு தீர்மானம்... 
சண்டையிடும் உரிமைதானடி 
உனக்கிருக்கிறது என்று 
நீ பேசாதிருக்கும் நேரங்களில் 
உன் காது மடல் கவ்வுவது 
நான் கொண்டு வரும் 
உரிமை மீறல் தீர்மானம்... 
காதலரசில் நாடாளுமன்றம்
தினம் தினம் கூடிக்கலைகிறது..
ஏதாவதொரு தீர்மானத்தை
முன்மொழிந்த படி..!!!
ஆர்ப்பரிக்கும் நதிக்கரையில் 
ஓய்ந்திருக்கிறது 
ஒரு பட்டாம் பூச்சி 
நதியை கடக்க பயந்து.. 
தன இறக்கைகளை மறந்து... 
பட்டாம் பூச்சிகளை
கூண்டுப்புழுக்கலாய்
மாற்றி இருக்கிறது 
புரிதலில்லா மணவாழ்க்கை..!!!

ஞாயிறு, 18 நவம்பர், 2012


உன் நினைவுசிறகணிந்து 
வாழ்க்கை கடலை 
பறந்து கடக்க 
எத்தனிக்கிறேன்... 
நிழல் உண்ணும் 
சிமிஹா  ராட்ஷஷியாய் 
தனிமை இரவுகள் 
என்னை தின்று விட 
முயல்கிறதே...!!!

திங்கள், 12 நவம்பர், 2012

துன்பம் நேர்கையில் 
உன் உதடுகள் 
விரலாகிறது.. 
நான் யாழாகிறேன்... 
மீட்டுகிறாய்.. 
இச்சென்ற சத்தமாய் 
வழிந்தோடுகிறது இசை..!!!

சனி, 10 நவம்பர், 2012

என் பார்வையிலிருந்து 
மறையப்போகும் 
கடைசி வினாடியில் 
திரும்பி பார்க்கிறாய்..
அந்த ஒற்றை பார்வை 
உறுதி செய்கிறது 
உன் காதலையும்
என் காதலையும்..!!!
என்னை காதலிக்கிறாயா.. 
என்ற என் கேள்விக்கு.. 
என்னை திருமணம் செய்துகொள்வாயா 
என்கிறாய் நீ..
ஒரு கேள்விக்கு 
ஒரு கேள்வியாலும் 
பதில் சொல்லலாம் என்று 
கற்றுக்கொள்கிறேன் நான்..!!!
ஒரே ஒரு 
வெளிச்ச புள்ளியாவது 
தெரியாதா என 
ஏங்கி காத்திருக்கும் 
இரவுகளில் 
சூரியனாய் வந்து விடுகிறாய் நீ.. 

நினைவுகளில் மட்டும்..!!!

ஒரு மழைத்துளிக்காக 
காத்திருக்கும் வேளையில்
ஒரு பேரருவியாய்
வந்து விழுகிறாய் நீ...

நினைவுகளில் மட்டும்..!!!

ஒரு சில்லறை சத்தத்திற்காக
தட்டேந்தி
காத்திருக்கும் நேரங்களில்
ஒரு புதையலாய்
வந்துவிடுகிறாய் நீ..

நினைவுகளில் மட்டும்..!!!

திங்கள், 5 நவம்பர், 2012


மலராத மொட்டுக்களை 
உன் கூந்தலில் 
சூடுகிறேன்.. 
உதடுகளால் பூக்கிறாய்.. 
உதிராத மல்லிகையாய்..!!!
*****************
உன் புன்னகையை புரிந்துகொள்ளும் 
பருவம் வந்தபின் 
தீபாவளி மத்தாப்புகள் எனக்கு  
திகட்டிவிட்டன..!!!
*****************
செடியிலிருந்து 
கிள்ளி எடுத்தபோதும் 
வருத்தப்படாத மலர்கள் 
கதறி அழுகின்றன.. 
உன் கூந்தலில் இருந்து 
உதிர்ந்த போது..!!!
எதிர் முனையிலிருக்கும் 
என்னுடன் நான் 
அலைபேசியிலும் 
சாட் பாக்ஸிலும் பேசுகிறேன்.. 
ஆம்.. எனக்குத்தெரியாமல் 

உன்னிடம் ஓடி வந்துவிட்ட 
என் உயிருடன்..!!!
உன் உதடுகளை பார்த்திருந்தால் 
வள்ளுவனே குழம்பி இருப்பான்... 

நீ உதடு சுழிக்கையில்..
முதல் வரியில் 
மூன்று வார்த்தைகளும் 
இரண்டாம் வரியில் 
நான்கு வார்த்தைக்களுமாய்.. 

நீ முத்தமிட உதடு குவிக்கையில் 
இரண்டு வரிகளிலும்
இரண்டு வார்த்தைகள் மட்டுமாய்...

நீ புன்னகைக்கையில்
இரண்டு வரிகளும்
நான்கு வார்த்தைகளாய்...

ஆமாம் ஆமாம்
நிச்சயம் குழம்பித்தான் போயிருப்பான்..!!!
Photo: பிரம்மன் 
கடைசி நிமிடம் வரை 
நிதானமிழக்காமல் 
செதுக்கிய சிற்பம் நீ... 
உன்னை ரசிக்க 
அவன் 
அவசரமாய் உருவாக்கியவன் 
நான்..!!!
பிரம்மன்
கடைசி நிமிடம் வரை
நிதானமிழக்காமல்
செதுக்கிய சிற்பம் நீ...
உன்னை ரசிக்க
அவன்
அவசரமாய் உருவாக்கியவன்
நான்..!!!

சனி, 3 நவம்பர், 2012

வான் வெளியில் இருந்து 
வளிமண்டலத்தில் நுழைந்ததும் 
பூமியின் மைய ஈர்ப்பில் 
நெருப்பாகி 
காற்றில் கரையும் எரிகல்லாய் 
கரைகிறேன்.. 
எங்கிருந்தாலும் 
உன்னை நோக்கி ஈர்க்கும் 
காதலீர்ப்பு விசையின் 
வேகம் தாளாமல்...!!!