நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

வியாழன், 5 ஏப்ரல், 2012

சொல்லி இருக்கலாம்... 
நீ பேருந்தை தவறவிட்டு 
மெல்ல நடந்த நேரத்தில் 
எதிர்பாராமல் வந்ததாய் 
காட்டிக்கொண்டு 
உன்னை அமர வைத்து
சைக்கிள் மிதித்த
மூன்று கிலோமீட்டர் தூரம்
எனக்காய் மட்டுமே இருந்தது ..
அப்போது சொல்லி இருக்கலாம்...!!

உற்சவ மூர்த்தி
ஊருக்குள் வரும்
தேர் திருவிழா அன்று
மாலை வாங்கிவரச்சொல்லி
வழி மரித்தாயே..
அப்போது சொல்லி இருக்கலாம்...!!

உனது தந்தையின் பெயர் சொல்லி
விலாசம் விசாரித்தார்களே..
உன்னை பெண் பார்க்க வந்தவர்கள்...
அன்று சொல்லி இருக்கலாம்..!!!

சாலையோர குடிநீர்க்குழாயில்
என் வருகை அறிந்து
நிறைந்த குடத்தை
கவிழ்த்து விட்டு
இன்னொரு பத்து நிமிடம்
நீட்டித்து நின்றாயே..
அப்போதும் சொல்லி இருக்கலாம்..!!

உன் வருகை தெரியாமல்
சிகரெட்டை வாயில் வைத்து
வளையம் விட
நண்பர்களோடு முயற்சித்த வேளையில்
யாருமறியாமல் முறைத்துச்சென்றாயே..
அப்போது சொல்லி இருக்கலாம்....!!!

ஏதோ கேட்பதற்காய்
என் அம்மா
உன் வீடு வந்த போது
கை பிடித்து "சாப்பிட்டுத்தான் போகணும் அத்தை"
என உரிமையோடு நிறுத்தி
இலை அறுக்க ஓடினாயாமே..
அன்றாவது சொல்லி இருக்கலாம்..!!

இப்போது என் கவிதைகளை
எங்காவது நீ படிக்க நேர்ந்து விடுமோ
என அஞ்சுகையில் தோன்றுகிறது...
என் வலியை என்னுள் புதைத்து
சொல்லாமலேயே இருந்திருக்கலாம்...!!

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

such a touching lines...love failire aanavanga padichaa kandippaa kangal kasivadhu uridhi....tamil la type panniyadhai idhil copy and paste panma mudiyalai....

Unknown சொன்னது…

Thank You so much Devi..

கருத்துரையிடுக