நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

திங்கள், 14 ஆகஸ்ட், 2017

தேவசேனா கவிதைகள்..

Image may contain: 2 people, people smiling, text and closeup

XXXXXXX( 1 )XXXXXXXXXX
எதையாவது காரணம் சொல்லி..
என் வீட்டு ஜன்னலை
ஒரு நாளைக்கு மூன்று முறையாவது
தட்டிட வேண்டும் அவளுக்கு...
அம்மா சர்க்கரை வாங்கி வரச்சொன்னதாய்...
தக்காளி கொடுத்து வர சொன்னதாய்....
காரணங்கள் முக்கியமில்லை அவளுக்கு...
என் ஜன்னலை தட்ட வேண்டும்...
அவ்வளவுதான்... அவ்வளவே தான்...
சிறப்பான காரணம் எதுவும் இல்லை....
ஜஸ்ட் என்னை காதலிக்க வேண்டும்...
அதை எனக்கு சொல்லிக்கொண்டே
இருக்க வேண்டும்...
எனக்கு அவள் மீதொன்றும்
காதலெல்லாம் இல்ல...
ஆனால் அவள் ஜன்னலை தட்டாவிட்டால்
நெஞ்சடைகிறது...
தூங்கிவிட்டாயா தேவசேனா ???


XXXXXXX ( 2 ) XXXXXXXXXXX





துயிலெழுந்து பார்க்கையில்
இலைகளும் பூக்களுமாய் சிரித்துக்கொண்டிருக்கிறது
வாசலில் நிற்கும் பன்னீர் மரம்...

நேற்றிரவு நீ இங்கு வந்திருந்தாயா தேவசேனா ??



XXXXXXXX ( 3 )XXXXXXXXXX


சலனமற்றிருக்கிறது காற்று...
மேகமுமில்லாமல்...
நட்சத்திரங்களுமில்லாமல்
வெற்று வீதியாய்
விரிந்து கிடக்கிறது வானம்...
அருவி கூட
அமைதியாய் விழுகிறது...
அலைகள் எல்லாம்
மௌனமாய் அலைகிறது...

எங்கும் நிசப்தம்....

நீ உறங்குகிறாயா தேவசேனா ???



XXXXXXXX ( 4 )XXXXXXXX

மேகங்களில்லாமல் தூறல் விழுகிறது....
ஊமை வெயில் சுள்ளென சுடுகிறது...
காற்றுக்கு வியர்கிறது...
பேரீச்ச மரத்தில் தொங்கும் கூட்டிலிருந்து
விர்ரென பறக்கிறது
தூக்கணாங்குருவி...
மீன்களோடு சேர்ந்து
நதியும் துள்ளுகிறது...

சோம்பல் முறித்தாயா தேவசேனா ??



XXXXXXXX ( 5 ) XXXXXXX

நேற்றைய மழையில் 
நீ நனையாமல் இருந்ததாய் 

நம்பிக்கொண்டிருகிறாயா.. தேவசேனா??

போடி.... தாழிட்ட அறையின்
ஜன்னலில் வழி தாவிக்குதித்து
வெளியோடி நனைந்த மனசை
கட்டுப்படுத்த முடியவில்லையேடி உன்னால்...??

XXXXXXXX ( 6 )XXXXXXXX

மரணத்திற்கு பிறகு
நான் பார்த்திராத
நரகத்திற்கு போகத்தான் ஆசை....
உன் மடி எனும் சொர்க்கம் தான்
இப்போதே வாய்த்திருக்கிறதே....
தேவசேனா...!!!

XXXXXXXX ( 7 ) XXXXXXXXXX


நாம் நண்பர்கள் என்றாய்...
நான் ஒப்புக்கொள்ள வில்லை...
நாம் காதலர்கள் என்றேன்..
நீ ஒப்புக்கொள்ளவில்லை...

இனிமேல் என் கூட பேசாதே.. என்றாய்...
இனிமேல் இங்கே வராதே.. என்றேன்..
இருவருமே ஒப்புக்கொண்டோம்....
நீயறியாமல் நானும்...
நானறியாமல் நீயும்...
வழிபார்த்து காத்திருந்தோம்...
மௌனங்களில் பேசினோம்...

என்னால முடியலடா... என்றாய்...
நாயே... ஏன் டி வந்த...என்றபடி அணைத்துக்கொண்டேன்..

நாம் நண்பர்கள் என்றாய்...
நான் ஒப்புக்கொள்ள வில்லை...
நாம் காதலர்கள் என்றேன்..
நீ ஒப்புக்கொள்ளவில்லை...

தேவசேனா..... என்ன இதெல்லாம் ????



XXXXXXX ( 8 )XXXXXXXXX

என் வழியெல்லாம் முட்கள்..
என் வழி எல்லாம் கற்கள்..
என் வழி எல்லாம் தடைகள்...
ஆயினும் வலி இல்லை...
வளியொற்றி
நான் மிதந்து வருகிறேன்...
உன் நினைவுகளை பிடித்துக்கொண்டு...

தேவசேனா... கண் மூடி
விழித்துக்கொண்டிருக்கிறாய் தானே??

XXXXXXX (9 )XXXXXXXXx




உனக்கு சிறகுகள்
இருக்கிறது...
நீ கூண்டிலும்
அடைக்கப்பட வில்லை...
ஆனாலும் உன்னால் பறக்க முடியாது
தேவசேனா...
என்னிடம் காதல் இருக்கிறது....
அதை தாண்டி எப்படி
உன்னால் பறக்கமுடியும்...??



XXXXXXX(10)XXXXXXXX



நேரமாகிவிட்டது... போய் தூங்கு
என்றென்னை அனுப்பிவிட்டு
கனவில் வந்து இதழ் கடிக்கிறாயே...
நீ எப்போதடி தூங்குவாய்
தேவசேனா ???

XXXXXXXX (11)XXXXXXXXXXX



உனக்கான முத்தங்களை வாங்கிய
தலையணை
வெட்கத்தால்
சிவந்து கிடக்கிறது...
தேவசேனா...!!!


XXXXXXXX (12)XXXXXXXXX


இதயம் திருடிய 
இரண்டொரு மாதத்தில்...
ஈடாக உன்னிதயம் தந்தாய்..
சில வருடங்களாய்
தூக்கம் திருடிச்செல்கிறாயே....
அந்த நேர்மை இப்போதேனடி இல்லை...
தேவசேனா ???

XXXXXXXX (13 ) XXXXXXXX


வெட்கத்தை எடுத்து
போர்த்திக்கொள்கிறாய்...
நான் நடுங்கிக் கொண்டிருகிறேன்..
தேவசேனா...


XXXXXXXX ( 14 ) XXXXXXXXx



எங்கே தொலைந்தோம் என்று
தேடிக்கொண்டிருக்கிறேன்.......
எடுத்து பத்திரமாய் வைத்திருப்பதை
காட்டிக்கொள்ளாமலேயே
என்னுடன் கைகோர்த்து
நடந்து வருகிறாய்...
தேவசேனா..!!!


XXXXXXXXX (15 )XXXXXXXXX

குதிரைவால் கூந்தல் தொங்கும்
உன் முதுகில் மோப்பம் பிடித்து
முத்தமிடுவது...
காமத்தில் வருமா
தேவசேனா ??


XXXXXXXXXX (16 )XXXXXXXXXXX






கோயிலில் திருநீறு வைத்துவிட்ட பிறகு
கண்களுக்குள் பறந்து விடாமல்
கை வைத்து ஊதி விட்டாயே....
அப்போதே தெரிந்தது தேவசேனா....
கடவுள் என்னை ஆசீர்வதித்திருப்பது...!!!


XXXXXXXXXXX (17 )XXXXXXXXX



அடியே... தேவசேனா...
போவதென்றால்...
நீ மட்டும் போயேன்...
ஏன் என் கவிதைகளையும்
கூட்டிச்சென்று விடுகிறாய்...
நீ வந்தால்தான்
அவையும் வருவேனென்று
அடம் பிடிக்கின்றன பார்..!!!

XXXX (19 )XXXXXXX

அம்புகளுகெல்லாம்
வேலை இல்லை தேவசேனா....
அதுதான் விழியிலேயே
வீழ்த்தி விட்டாயே ....!!!

XXXXXX (20 )XXXXXXXXX

நம் உதடுகளுக்கிடையான
பிரச்சினையை அவைகள்
சண்டையிட்டு தீர்த்துக்கொள்ளட்டும்...
நாம் பேசிக்கொண்டிருப்போம்
வா... தேவசேனா...!!


XXXXXX (21 )XXXXXXX

உன் நிழலை 
சிறைபிடித்து வைத்திருக்கிறேன்......
வேண்டுமானால்
ஒரு முத்தம் கொடுத்து
மீட்டுக்கொண்டு போ.....
தேவசேனா... !!!

XXXXXXX (22 )XXXXXX





காற்றில் சிலும்பிய
கற்றை முடிகளை
நளினமாய் ஒதுக்கினாயே.....
அப்போதே வகிட்டிலிருந்து
வழுக்கி விழுந்துவிட்டேன்
தேவசேனா...
நல்லவேளை....
உதட்டில் தாங்கிவிட்டாய் நீ....


XXXXXXX (23 )XXXXXX

நிறைய இருட்டையும்
கொஞ்சம் வெளிச்சகற்றைகளையும் 
துணைக்கழைத்துக்கொண்டு
நானும் தேவசேனாவும்
தனியறைக்கு செல்கிறோம்..
உங்கள் கனவுகளை
தொலைத்து விடாதீர்கள்..!!!

XXXXXXX ( 24 )XXXXXX




சோழ சாம்ராஜ்யத்தின் நகர்வுகளை
சுட்டுவிரலில் தீர்மானித்த
குந்தவைகுள்ளும் ஒரு காதல் இருந்தது..
தெரியுமா தேவசேனா ??

XXXXXXXXXXX (25)XXXXXXXX

நீ 
காதலை விதைத்து சென்றுவிட்டாய்....
தேவசேனா...
அது இதயம் பிளந்து
வளர்ந்துகொண்டிருக்கிறது...!!!

XXXXXXX (26 )XXXXXXXXX

குடை எடுத்து சென்றால்
மழையில் நனையாமல்
வந்திருக்கலாம் தான்

ஆனால்....
நீ முந்தானை எடுத்து
தலை துவட்டி இருக்க மாட்டாயே....
தேவசேனா....!!!

XXXXXXX (27 )XXXXXXXXXx




தேவதைகள் ... என்பது
நிச்சயமான ஒரு இலக்கண பிழை...

நீ ஒருத்திதானே இருக்கிறாய்....
தேவசேனா...

"தேவதை" என்பதுதானே சரி??

XXXXXXX ( 28 )XXXXXXXXX




நீ இளைத்திருக்கிறாய் என
கவலைப்படுகிறேன் நான்....
என் பாரம் குறைப்பதற்காக
பட்டினி கிடந்திருக்கிறாய் நீ...

தங்கம் எடை குறைவதை
தாங்கிக்கொள்ள முடியாது தேவசேனா...!!

XXXXXXX (29 )XXXXXXXXX

ஒருமுறையாவது
உன்னை அழ வைத்துவிட
விளையாட்டாய் நான் எடுக்கும்
எல்லா முயற்சிகளும்
உன் மார்பில் சாய்ந்து
தேம்பலுடனே
தோற்றுப்போகிறது
தேவசேனா...!!!!

XXXXX (30 )XXXXXXXXX




நடுவில் எழ நேர்ந்தாலும்...
நீ வரும் கனவை மட்டும்
என்னால் மீண்டும் தொடர முடிகிறது
தேவசேனா...!!


XXXXXX (31 )XXXXXXX

நீ தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக
தொடர்ந்து சொல்லிக்கொண்டிருகிறது
ஒரு பெண்குரல்...
அந்த எல்லையை தாண்டி
நானும் வந்துகொண்டிருக்கிறேன்
தேவசேனா...!!


XXXXXXX(32 )XXXXXX

நான் நெருங்குவதை உணர்ந்ததும்
வேக வேகமாய் வெட்கச்சுவர் எழுப்பி
மறைந்து கொள்கிறாய்...
ஆனால் தாழிட மட்டும்
தாமதிக்கிறாய்...
இது காதலில்லாமல்
வேறென்ன தேவசேனா ??

XXXXXXX (33 )XXXXXXXXX




நீ மூழ்கி எழுந்ததும்
புனிதமடையலாம் என்று
கங்கை காத்திருப்பது
உனக்கு தெரியுமா தேவசேனா...!!

XXXXXXXX (34 ) XXXXXXXX

என் மீது ஏதோ
கோபத்திலிருக்கிறாய் என்பதை கூட
உணர முடியாமல்
காதல் என் கண் மறைத்திருகிறது
தேவசேனா...!!!


XXXXXXXXX (35 )XXXXXXX

நீயும் இறைவனும்
உன் மீது வைத்திருக்கும்
வண்ணப் புள்ளிகளை இணைத்து
இதழ்களால் கோலம் போடுகிறேன்....
கண் மூடு தேவசேனா... !!!

XXXXXXXXXX (36 )XXXXXXX




வாழ்க்கை முழுதும்
உன்னை வாசித்துக்கொண்டே
இருக்கப்போகிறேன் தேவசேனா....
நீ நூலென்றால் நான் இதழ்...
நீ யாழென்றால் நான் விரல்...!!

XXXXXXXXX (37 )XXXXXXXXX




என் காதலை பார்த்து
உனக்கே உன் மீது
பொறாமை வருகிறதே....
வாசிப்பவர்களுக்கு வராதா....
தேவசேனா ??


XXXXXXXXX (38 )XXXXXXXX




முதன் முதலில்
ஏவாளை பார்த்த ஆதாம்
என்னவாகி இருப்பான்...
தேவசேனா??
அந்த வினாடியை
மீட்டெடுப்போம் வா...!!!


XXXXXXXX (39 )XXXXXX





நீ மலர்ந்து காத்திருக்கும்
மலர்தான்...
நான் உன்னை வருடக்கணக்காய் சுற்றும்
வண்டு தான்...

அந்த தேன்...
காதலா... காமமா என்பதில்தான்
குழப்பம் தேவசேனா..!!!

XXXXXX ( 40 ) XXXXXXX

ஊடல் காமத்திற்கின்பம் தான்...
ஆனால்......
வாரக்கணக்கில் ஊடல் என்பதெல்லாம்
கொடுமையின் உச்சம்
தேவசேனா...!!


XXXXXXXX (41 ) XXXXX


நம் காதல் எதுவரை தேவசேனா ??
நம் திருமணம் வரை...??
குழந்தை பெற்றுக்கொள்ளும் வரை...??
குழந்தைகள் வளரும் வரை??
அவர்களுக்கு திருமணம்.... பேரக்குழந்தைகள்...??
உன்... அல்லது என் மரணம் வரை...?
அல்லது நம் மரணம் வரை...??

போடி... பைத்தியக்காரி...
காதல் இருக்கும் வரை...காதலிக்கலாம் வா...!!!


XXXXXX (42)  XXXXXXXXX


தேவசேனா இல்லாத நேரத்திலும்
தேவசேனா தான் துணை எனக்கு...
இருந்தால் அவளுடன்.....
இல்லையென்றால்
அவள் பற்றிய நினைவுடன்...!!!


XXXXXXXXX (43) XXXXXXXXXX

விசித்திரமாயிருந்தது
நேற்றைய இரவு...
நானும் தேவசேனாவும்
மட்டுமே இருந்தோம்....
ஆனால்....
இருவரும் ஒன்றாக இல்லை...
என்னிடத்திற்கு அவள்
இடம் பெயர்ந்த
அதே நேரம்...
அவளிடம் நான்
சரணடைந்திருந்தேன்...

உன்னை வெல்வது எப்படி என
அவள் என்னிடம் கேட்டாள்....
நான் அவளிடம் கேட்டேன்....
கேட்டுக்கொண்டே
தோற்றுப்போனோம்... சந்தோஷமாய்...


XXXXXXXXXXXX( 44)XXXXXXXXXXXXX

உன் விழி வெளிச்சத்தை
என் பக்கம் திருப்பி
என் காதல் அசைவுகளை
ஊருக்கெல்லாம்
தெரியவத்துவிட்டாய்...

நீ மட்டும்
இருட்டில் மறைந்துகொண்டு
உன் காதலை
எனக்கே கூட தெரியாமல்
மறைக்கிறாயே...
நியாயமா தேவசேனா ??

XXXXXX (45 ) XXXXXXXXX

தேவசேனா...!!!

தாஜ்மஹால்..
ஈபிள் கோபுரம்..
மாஸ்கோ பெரிய மணி..
பாபிலோன் தொங்கும் தோட்டம்..
பைசா நகர சாய்ந்த கோபுரம்..
எகிப்து பிரமிடுகள்..
சீனப்பெருஞ்சுவர்...
தேவசேனா....!!!

முத்து..
பவளம்..
வைரம்..
வைடூரியம்..
மரகதம்..
கோமேதகம்.
புஷ்பராகம்...
நீலம்..
மாணிக்கம்...
தேவசேனா...!!!

புதன்..
வெள்ளி..
பூமி...
செவ்வாய்..
வியாழன்..
சனி...
யுரேனஸ்..
நெப்டியூன்..
ப்ளூட்டோ...
தேவசேனா...!!

சரிதான்......
எனக்கு எங்கேயோ மறை கழன்றுவிட்டது என்றுதானே நினைக்கிறாய்....
இயற்கையோ...
செயற்கையோ...
உலகின் ஆகச்சிறந்ததை வரிசைப்படுத்தினால் உன்பெயர் இல்லாமல்
எப்படி அது முழுமை பெரும்..
தேவசேனா???
XXXXXXXXXX ( 46) XXXXXXXXXX

மரணம் என்னை தழுவும் போது..
நான் பார்க்கும் கடைசி முகம்
என் தேவசேனாவுடையதாக இருக்க வேண்டும்..
என் தலை சாய்ந்திருக்கும் மடி
என் தேவசேனாவுடையதாக இருக்க வேண்டும்..
என் கடைசி மூச்சில்
என் தேவசேனாவின் வாசம்...
என் கடைசி பேச்சில்..
என் தேவசேனாவின் பாசம்...
இது மட்டும் நேர்ந்தால்...

என் பாவங்கள் மன்னிக்கப்பட்டு..
சொர்க்கத்தின் கதவுகள் அகலத்திறக்கும்...
XXXXXXXXX (47 ) XXXXXXXXXX

என் தோட்டத்தில்
சூரியகாந்தி பூக்கள் எல்லாம்
சூரியனுக்கு எதிர் திசையில்
திரும்பி நிற்கின்றன...
அவைகளை கண்டித்து வைக்க வேண்டும்...
உன் சகவாசம் கூடாதென்று........
உன்னை யார் அவைகளுக்கு
வெட்கத்தை கற்றுத்தரச்சொன்னது
தேவசேனா ??
XXXXXXXX (48) XXXXXXXXXXX
எனக்குத்தெரியும் தேவசேனா...
இது பேராசைதான்...
ஒரு சிட்டுகுருவி
கடலை குடித்துவிட முயலும் பேராசை...
எனக்கு தெரிந்த
சில நூறு வார்த்தைகளில்
உன் மீதான காதலை
சொல்லிவிட நினைக்கிறேன்...
பெயர் கடந்த சமுத்திரமாய்
விரிந்து கிடக்கிறது என் காதல்..!!!
XXXXXXXXX ( 49) XXXXXXXXXXX
தேவசேனா தூங்கினால் இரவு...
விழித்திருந்தால் பகல் என்று
புரியும்படியாக சொல்லாமல்....
பூமி தன்னைத்தானே சுற்றி
சூரியனையும் சுற்றுவதால்
இரவு - பகல் என்று
என்னை குழப்பி விட்டார்கள்
இந்த பூகோள-பௌதீக ஆசிரியர்கள்...
இல்லையென்றால் நானும்
ஏதேனும் பட்டப்படிப்பு படித்திருப்பேன்
தேவசேனா,,
XXXXXXXXXXX ( 50 ) XXXXXXXXXXXX
சனியனே ..
பிசாசே.. என்கிறேன்...
குரங்கா... கள்ளா...
என்கிறாள் தேவசேனா...
திட்டுவதோ... கொஞ்சுவதோ..
வெறும் வார்த்தைகளில் இல்லை...!!!
XXXXXXXXX (51 )XXXXXXX
யாருக்கும் தீங்கு பண்ண கூடாது...
பொய்யே சொல்ல கூடாது..
பாவப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும்...
தினசரி என்னை கும்பிட வேண்டும்...
யாரையும் துன்புறுத்த கூடாது...
தானம் செய்ய வேண்டும்... .
...... ..... .. . ....
யோவ் போயா...
என் தேவசேனாவின் மடியில்
உயிர் விடுகிறேன்..
நான் சொர்க்கம் நுழைவதை
நீ எப்படி தடுப்பாய் ??
XXXXXXXXX  (52 ) XXXXXXXXXXX
தேவசேனா....

பல நேரங்களில்
உன்னிடம் பேசுவதை எழுதுகிறேன்...
நகைக்கடையில்
நகை வாங்குவது மாதிரி...
அது கவிதையாக விழுகிறது...

சில நேரங்களில்
எழுதியதை உன்னிடம் பேசுகிறேன்...
பொற்கொல்லனிடம்
தங்கம் கொடுத்து
நகை செய்யச்சொல்வது மாதிரி...
நீ அதை கவிதையாக்கி விடுகிறாய்...
XXXXXX (53) XXXXXXX
கதவிடுக்கில் கசியும் வெளிச்சம்
காரிருளை வெட்டிப்பிளப்பது மாதிரி
இதயத்தில் இறங்குகிறாய்....
தேவசேனா....
தாழ் திறந்து தான் இருக்கிறது....!!!
XXXXXXXXX ( 54) XXXXXXX
தினசரி நூறுமுறை வாசித்தும்
மீண்டும் மீண்டும் வாசிக்க தூண்டும்
தீராக்கவிதை...
என் தேவசேனா...
XXXXX ( 55)XXXXXX
இச்சா சக்தி-கிரியா சக்தி என்கிறார்கள்
மெய்ஞானிகள்..
ஈர்ப்புவிசை-காந்த விசை என்கிறார்கள்
விஞ்ஞானிகள்...
தேவசேனா என்கிறேன் நான்..
அவ்வளவுதான்..
XXXXXXX ( 56) XXXXXXXXX
ஒரே ஒரு தேவசேனா...
கொஞ்சம் மல்லிகைப்பூ...
நிறைய காதல்...
முன்னூற்று அறுபத்தைந்து நாட்கள்...
XXXXX (57) XXXXXXXX
கண்ணாமூச்சி
ஆடிக்கொண்டிருக்கிறாள்
தேவசேனா...

சில நேரம் விழி மூடியும்...
சில நேரம் மனம் மூடியும்....

அவளுக்கு தெரியும்
நான் அறிந்திருக்கிறேன் என்பதுவும்...
தெரியாதது போல்
தேடிக்கொண்டிருக்கிறேன் என்பதுவும்
XXXXXXXX ( 58) XXXXXXXXX
உன் இதழை கடக்கையில்
என்னுடைய
சில முத்தங்கள்
தொலைந்து விட்டது.....
தேவசேனா..

கொஞ்சம் வெட்கம் விலக்கு...
நான் தேடி எடுத்துக்கொள்கிறேன்.
XXXXXXXXX ( 59) XXXXXXXXX
ஏதோ ஒரு குருவி எச்சமிட்டதில்
கோபுர விரிசலில் விழுந்த விதை
முளைத்ததை போலத்தான்
நீயும் என்னுள் முளைத்து
விஸ்வரூபமாய் வளர்ந்துகொண்டிருக்கிறாய்..
தேவசேனா...
ஆனால்....
நான் சிதிலமடைந்து விடாமல்..
என்னை சுற்றி
வேர்களால் வலை பின்னியபடி...
XXXXXXXXXX ( 60) XXXXXXXXXX
உன் உடனிருக்க வேண்டுமென்பதை தவிர வேறெந்த எதிர்பார்ப்பும் இல்லை..
உன் விரலிடுக்கில் என் விரல்கள் சிறைப்படவேண்டுமென்பதை தவிர
வேறெந்த ஆசையும் இல்லை..
இது ..ஏன்.. எதற்கு என்ற ஆராய்ச்சியோ.....
இதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்ற
தேடலோ தேவையில்லை...
அது அதுவாகவே இருக்கட்டும்...
குண்டச்சி..தேவசேனா...!!!
XXXXXXXXXXX (61 ) XXXXXXXXX
நிராகரிப்பற்ற தனிமை...
சுயவிலகலில் கிடைத்தது..
மரணவாசலில் மீண்டு வந்து
நூறை நெருங்கும் கிழவனைப்போல
தேடுகிறேன்....
என்னோடு நீ மட்டுமே நிற்கிறாய்..
உன் மடி தேடி
தலை தூங்குகிறேன்....
கைகளில் ஏந்தி மடி சேர்க்கிறாய்...
காலனை எட்டி உதைத்து
சவால் விடுகிறேன்...
போடா....
நான் ஏற்கெனவே சொர்கத்திலிருக்கிறேன்...
XXXXXXXXXX (62)XXXXXXXXXX
என் காதலை வேர்களைப்போல் தான்
மறைத்து வைத்திருந்தேன்....
காட்டாற்று வெள்ளமாய்
நீ கரையை அரித்ததில்
வேர்கள் தெரிய வீழ்ந்து கிடக்கிறேனடி..
XXXXXXXX (63) XXXXXXXX
உன்னை காதலிக்கிறேன் என்று
எப்போதும் சொல்லப்போவதில்லை....
வெறுமனே காதலிக்கப்போகிறேனடி...
XXXXXXXXX (64)XXXXXXX
தண்ணீர் குடிக்கிறேன்...
குளிர்சாதன இயந்திரத்தின் வேகத்தை
இருமடங்காய் கூட்டி வைக்கிறேன்...
கண்களை மூடி
காற்றை உள்ளிழுக்கிறேன்...
எதிலும் ஆசுவாசம் கிட்டவில்லை...
நேற்றிரவு தரவிறக்கம் செய்த
உன் புகைப்படத்தை
ஒருமுறை பார்க்கிறேன்....
என்ன மாயம்....
இழந்த சக்தியை மீட்டுக்கொண்டு
மறுபடியும் அலுவலக பணியில்
தொலைந்துபோகிறேன்...
XXXXXXXXX(65)XXXXXXXXX
எனக்கென்னவோ
நான் தொலைந்துபோய் விட்டதாகத்தான்
தோன்றுகிறது....
பார்வை... சுவாசம்...பேச்சு...
எண்ணம்...தூக்கம்.. பசி... என
நீயே யாதுமாகி இருக்கையில்...
ஏதுமற்ற நான்
தொலைந்து போயிருக்கிறேன் தானே...
XXXXXXXXX (66 )XXXXXXXX
நினைவுகளை போர்த்திக்கொள்...
காதலை தலையணையாக்கு....
கண்களுக்குள் என்னை வைத்து
இமைக்கதவுகளை மூடு...
கனவுகளற்ற வெற்று பிரதேசத்தில் பற...
நீ தரை தொடும் நேரம்
இந்த பூமி ஆசீர்வதிக்கப்படட்டும்...
XXXXXXXXXX (67) XXXXXXXX
உன்னைப்பற்றிய ஒரு கவிதையை
எக்காலத்திலும் எழுதிவிட
முடியாதென்பது எனக்கு தெரியும்....
உலகின் எந்த மொழிகளிலுமே
உன்னைப்பற்றி எழுதிவிடும்
பொருத்தமான வார்த்தைகளே இல்லை....

குறைந்தபட்சம்
உனக்கான கவிதையையாவது எழுதிவிட
நினைக்கிறேன்...
வார்த்தைகளற்ற மௌனக்கவிதையை...
ஓசைகளற்று உச்சரிக்கிறேன்...
கேக்கிறதா....
XXXXXXX (68)XXXXXXXX
யௌவனத்தின் நெடிய பாதையில்
பூக்களூடே நிற்கிறாய் நீ....
தேனெடுக்க வரும் வண்ணத்துப்பூச்சி
குழம்பி தவிக்கிறது...
காற்றில் பறக்கும் மகரந்த பொடிகளால்
காலம் உன் இளமையை
மெருகேற்றிக்கொண்டிருக்கிறது..
ஏந்திய தூரிகையுடன்
வானத்தில் வரைய தொடங்குகிறேன்...
வேடிக்கை பார்த்தபடி விலகி நிற்கிறது
அந்த வண்ணத்துப்பூச்சி...
நிச்சயம் அது உணர்ந்திருக்கும்...
இது அவனுக்கான பூ என்று...
XXXXXXXX (69) XXXXXXXXXX
தீராநதிகளின் கரைகளை
உடைத்துக்கொண்டோடுகிறது காதல்..
காகித கப்பலில்
பதில் தேடி அலைகிறது எதிர்பார்ப்பு...
காதலின் முரட்டுச் சுழலில்
சிக்கி தடுமாறி
தொலைந்தே போகிறது.....
எதிர்பார்ப்பு தொலைந்த காதல்
ஆசுவாசப்பட்டபடி
மெல்ல மெல்ல சலசலத்து ஓடுகிறது..
XXXXXXXXX (70)XXXXXXX
சதுப்பு நிலக்காடுகளின்
இலையுதிர் கால சருகுகள் மூடி இருக்கும்
புதைகுழியாய் இழுக்கிறது
எனதன்பு உன்னை...
பிடிவாதமாய் நீ கட்டி இழுக்கும் மனசு
நிச்சயம் வெளிவரப்போவதில்லையடி....
XXXXXXXX (71) XXXXXXXXX
வெற்று வார்த்தைகளால்
விவரித்துவிட முடியாத
என் மௌனங்களை மொழிபெயர்க்கத்
தெரிந்திருக்கிறது உனக்கு...
என் இதயத்துடிப்பிற்கும்
மூச்சுக்காற்றிற்கும் கூட
வேக வித்தியாசத்தின்
காரணம் தெரிந்திருக்கிறது உனக்கு...
இதயம் நுழையாமல்
இதெப்படி சாத்தியம் ???
XXXXXXXXX (72)XXXXXXXXX
மோகப்பெருவெளியின்
வெற்றிடத்தில் சுழற்றி வீசப்பட்டிருக்கிறேன்...
நல்லவேளை...
உன் விழியீர்ப்பு விசையால்
இழுத்துப்பிடித்திருக்கிறாய்...
மனசின் மத்தியிலிருந்து
நம்மிடையே இருக்கும்
கண்ணுக்கு தெரியாத நூலொன்று
நீளம் குறைந்துகொண்டே போகிறது....
XXXXXXXX (73) XXXXXXXX
பிரபஞ்ச பெருவெளியில்
ஒற்றைத்துகளாய் இலக்கற்று
பறந்துகொண்டிருக்கிறேன்...
உன் நினைவுகளை சுமந்துகொண்டு....
கொஞ்சநேரம் இளைப்பாற ஆசை..

ஆமாம்.... நீ நவராத்திரி கொலுப்படி
கட்டிவிட்டாயா.....
பொம்மைகளுக்கிடையே
கொஞ்சம் இடம்விட்டு வை...
யாருமறியாமல் அங்கமர்ந்து
உன்னை ரசித்து
இளைப்பாறிக்கொள்கிறேன்..!!
XXXXXXXX (74) XXXXXXXX
வெட்டவெளியில்
உயர்ந்து வளர்ந்துகொண்டிருக்கிறது
ஒற்றை பனைமரம்....
காய்ந்த மட்டைகள் காற்றில் சலசலக்க
மீண்டுமொரு புதிய குருத்தை
சிலிர்ப்பாய் பிரசவிக்கிறது...

அது உன்னை நோக்கி
ஒவ்வொரு அங்குலமாய்
நகர்வதையுணர்ந்து
இறங்கி வருவாயா சூரியனே.....
XXXXXXX (75 ) XXXXXXX
மழைத்துளி மட்டுமே அருந்தும்
சக்கரவாகமாய்
தாகமெடுத்து காத்திருக்கிறேன்...
காதல் கருமேகங்கள்
சூல்கொண்டிருக்கும்
மனசை உடைத்து
எப்போது மழையாய் பொழிவாய்??
XXXXXXXXX (76 ) XXXXX
வடக்குவாசல்
தூக்கணாங் குருவிக்கூட்டிலிருந்து
மெல்லிய கீற்றாய்
கசிந்து வழிகிறது
களிமண்ணால் கைதியாக்கப்பட்ட
மின்மினிப்பூச்சியின் வெளிச்சம்..

நனைந்த இரவில்
பூவிதழில் தேங்கி நின்ற
கடைசி சொட்டு மழையையும்
உருட்டித்தள்ளுகிறது காற்று..

ஈரபூமியில் வேர்கள் விட்டு
மண் முட்டி மெல்ல நிமிர்கிறது
ஒரு தளிர் செடி....
அது என் காதல்...

உன் கால்விரல் இடுக்கில்
வளர்ந்து படர்ந்து சுற்றி
ஒருநாள் உன்னை விழுங்கிவிடும்
உத்வேகத்துடன்....
XXXXXXXX ( 77 ) XXXXXXXXXX
பிரளய கால பூமிப்பந்தாய்
கலைந்து கிடக்கிறது மனசு...
கண்ணில் பட்டத்தை எல்லாம்
தூக்கிப்போட்டு விளையாடும்
ஊழிக்காற்றாய்
உயர்ந்து கொண்டே போகிறாய் நீ...
இது எதுவும் தெரியாமல்
உதடுகள் மட்டும் முணுமுணுக்கிறது..
XXXXXXXXXX (78) XXXXXXX
நீளிரவின் மத்தியில் தாகம் வறட்ட
தூக்கம் கலைகிறது...
இரைதேடி புறப்பட்டிருந்த எலியொன்று
காது புடைக்க
உத்திரத்தின் மீதமர்ந்து
எட்டிப்பார்க்கிறது...
புவியீர்ப்பு விசைக்குள் புகுந்த
விண்கல்லொன்று
வெளிச்சம் கக்கியபடி
ஜன்னல் வானத்தை விரைந்து கடக்கிறது....
தொடுதிரை நிறைத்த
தேவதை பிம்பத்தை பருகி
உறக்கம் தொடர்கிறேன்..
XXXXXXXXXXXX ( 79)XXXXXXXXX
மாயக்கண்ணாடியில்
புடைப்புச்சிற்பமாய் மேலெழுகிறாய்....
பொருந்துவதற்கு ஏதுவாய்
குடைவுச்சிற்பமாய் என்னை நானே
செதுக்கிக்கொள்வதற்குள்
மறைந்துவிடுகிறாய்...
கண்ணாமூச்சி ஏனடி....
XXXXXXX (80 ) XXXXXXXXXXXXX
நான் எப்போதாவது அரிதாய் எழுதி விடும்
கவிதை மாதிரித்தான் என் நினைவுகள்
உனக்கு வருகிறது....
மீட்டெடுக்கும் முயற்சியில்
சற்றும் மனம் தளராதிருப்பினும்...
என்னதான் ஈரநிலமாயிருந்தாலும்
உழவுசாலில் ஆழவிழுந்த விதை போல
முளைக்க முட்டி தவித்து திணறி
தோற்றுத்தான் போகிறேன்....
XXXXXXXXXXX (81) XXXXXXXXXXX
நாம் இணைந்திருந்த காலங்களை விட
இணைய
காத்திருந்த காலங்களில்தான்
காதல் அதிகமிருந்ததை
அறிந்திருக்கிறாயா??
ஏனென்றால்..
அப்போது நம்முடன் காதலும் இருந்தது
XXXXXXXXXX( 82 ) XXXXXXXXX
அலைபேசியில்
காசு தீரும் வரை பேசுவதாய்
சொன்னவர்கள் மத்தியில்
காதல் தீரும் வரை பேசி தீர்த்திருக்கிறோம்
அதை உணரவே
இத்தனை காலமாயிற்றெனக்கு....
இப்போதெல்லாம் என் அலைபேசிக்கு
நான்கு நாட்களுக்கு ஒருமுறை
இரையூட்டினால் போதுமானதாயிருக்கிறது...
மணிக்கணக்கில் பேசியபொழுது
ஒரே ஒருமுறை கூட
உச்சரிக்காத வார்த்தைகளை
இப்போதெல்லாம்
சில வினாடிகளுக்குள்ளாகவே உதிர்த்து விடுகிறாய்...
நெருங்க நெருங்க விலகிய காதல்
தூரநின்று கைகொட்டி சிரிக்கிறது....
XXXXXXXXXX ( 83 ) XXXXXXXXXX
மூன்றரை மணிநேர தொடர்மழை
நீ நனைந்தால்தான் ஓய்வேன் என்று
விடாமல் பெய்கிறது....
ஒதுங்கி இருந்த தேநீர்கடை ஊழியர்கள்
ஏதாவது சொல்லும் முன்பே
இடம் பெயர இங்கிதம் தூண்டுகிறது....
நனைந்துகொண்டே அறை திரும்பி
நடுக்கத்தினூடே மடிக்கணினி திறந்து...
நேற்றிரவு தரவிறக்கம் செய்த
உன் புகைப்படத்தில் குளிர் காய்கிறேன்.....
மார்புக்கதகதப்பு மனிதம் வெல்கிறது....
மீண்டும் மிருகமாகிறேன்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக